சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னரை சேர்க்காததே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்தை எதிர்கொண்ட தோனியால் ஒரேயொரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 2008ஆம் ஆண்டுக்கு பின் ராஜஸ்தான் அணி முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. சென்னை அணியின் தோல்விக்கு டெவோன் கான்வே ஆட்டம், மிடில் ஆர்டர் வீரர்களின் ஃபார்ம், சுழலுக்கு சாதகமான மைதானம் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

ஆனால் இன்னொரு முக்கியமான காரணம், சிஎஸ்கே அணிக்காக கடந்த 3 போட்டிகளில் விளையாடிய மிட்செல் சான்ட்னரை சேர்க்காததே முக்கிய காரணமாக உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் விளையாடிய சான்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, எகானமியாக 6.75 மட்டுமே வைத்துள்ளார். விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும், ரன்களை விட்டுக் கொடுக்காமல் எதிரணியை பிரஷரில் போடுவதில் வல்லவரான சான்ட்னரை தோனி அணியில் சேர்க்கவில்லை.
அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட தீக்சனா 4 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. தீபக் சஹர் இல்லாததால் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்த தீக்சனா சேர்க்கப்பட்டிருந்தாலும், நியூசிலாந்தில் இருந்து வந்த உடனே அணியில் சேர்க்காமல் அடுத்த போட்டியில் களமிறக்கி இருக்கலாம். வழக்கமாக வின்னிங் காம்பினேசனில் மாற்றம் செய்வதை விரும்பாத தோனி, எதற்காக சான்ட்னரை சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

சான்ட்னரை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயம் ரன்களை கட்டுப்படுத்தியதோடு, பட்லரை போன்ற வீரர்களின் எழுச்சியையும் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பார். அதேபோல் அணிக்கு என்ன தேவையோ, அதனை செய்து ரன்களையும் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பார். இதனால் அடுத்தப் போட்டியில் சென்னை அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் சான்ட்னர் சேர்க்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.