பெங்களூரு: சனாதன தர்மத்தை பழித்ததற்கான பலனை தான் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் அறுவடை செய்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இதில் தெலங்கானாவை தவிர்த்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதில் ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது.
அங்கும் பாஜக வெற்றிபெற்றுள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜக - காங்கிரஸ் நேருக்கு நேர் மோதிய 3 மாநிலங்களிலும் பாஜக வென்றுள்ளது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ட்ரெய்லராகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் மனதில் பட்டதை வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிடும் வெங்கடேஷ் பிரசாத், இந்திய வீரர்களை காட்டமாக விமர்சித்து வருபவர். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில், சனாதன தர்மத்தை பழித்ததால் தான் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
3 மாநில தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமைக்கு கிடைத்த மற்றொரு சான்று தான் இந்த வெற்றியாகும். அதேபோல் அடிமட்ட லெவலில் பாஜக தொண்டர்கள் சிறந்த பணியாற்றியுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். வெங்கடேஷ் பிரசாத்தின் எக்ஸ் பதிவு ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.