கொழும்பு: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அடுத்த நாளில் ஆட்டம் தொடரப்படும் என்று ஏசிசி அறிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இரு அணிகள் மோதிக் கொண்ட போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ரசிகர்கள் சோகமடைந்தனர். அதேபோல் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களும் நஷ்டம் அடைந்தனர்.

இதன் காரணமாக ஆசியக் கோப்பை தொடரை இடமாற்றம் செய்யவும் கூட பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது. ஆனால் சூப்பர் 4 சுற்று போட்டிகள் திட்டமிட்டப்படி கொழும்புவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொழும்புவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நாளை 80 சதவிகித மழையும், செப்.10ஆம் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நாளன்று 90 சதவிகித மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ள செப்.12ஆம் தேதி 80 சதவிகித மழையும், பாகிஸ்தான் - இலங்கை மோதவுள்ள செப்.14ஆம் தேதி 709 சதவிகித மழைம், இந்தியா - வங்கதேசம் மோதவுள்ள செப்.15ஆம் தேதி 70 சதவிகித மழையும், இறுதிப்போட்டி நடக்கும் செப்.17ஆம் தேதி 50 சதவிகித மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் செப்.10ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள போட்டிக்கு ரிசர்வ் டே இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதாவது செப்.10ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்து ஆட்டம் நடக்காமல் இருந்தால், எந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அதே நிலையில் அடுத்த நாளில் ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்.11ஆம் தேதி எந்தப் போட்டியும் திட்டமிடப்படாததால் இந்தியா - பாகிஸ்தான் விளையாடுவதிலும் எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகள் விளையாட உள்ள போட்டிகளுக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.