
பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜம் சேதி பதிவிட்ட கருத்து தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெய் ஷாவின் ட்வீட்டிற்கு பதில் கொடுத்துள்ள அவர், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. இந்தாண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் தான் நடத்துகிறது. ஒருதலைபட்சமாக செயல்பட்ட அவர், வேண்டுமென்றால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அட்டவணையையும் முடிவு செய்துவிடுவது தானே?? என நக்கலாக கேட்டிருந்தார்.

என்ன கோபம்
இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. ஏனென்றால் ஆசிய கோப்பை தொடர் இன்னும் எங்கு நடைபெறுகிறது என்றே உறுதியாகவில்லை. பாகிஸ்தானிடம் உரிமை இருந்தாலும், இந்திய அணி அங்கு செல்லாது என்றும், வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என்றும் ஜெய்ஷா கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் வரவில்லை என்றால் உலகக்கோப்பைகாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி செல்லாது என தடாலடியாக அறிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிய கவுன்சில் தந்த பதிலடி
இந்நிலையில் இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரமான பதிலடியை கொடுத்துள்ளது. அதாவது ஆசிய கோப்பை அட்டவணைகளை டிசம்பர் 13ம் தேதியன்று அனைத்து மட்ட குழுக்களும் ஏற்றுக்கொண்டன. மேலும அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அதன் விவரங்கள் அனுப்பப்பட்டது. சில கருத்துகளும் வந்திருந்தன. ஆனால் பாகிஸ்தான் எந்தவித பதிலுமே அனுப்பவில்லை. எனவே இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பதிலடி தந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
50 ஓவர் உலகக்கோப்பை இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை தொடரை நடத்தவுள்ளனர். குறிப்பாக 50 ஓவர் வடிவ கிரிக்கெட்டாக இது நடைபெறவுள்ளது. விரைவில் போட்டிகள் எங்கு நடக்கிறது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications