துபாய்: ஏசிசி யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக தொடர்ந்து 2 முறை ஆசியக் கோப்பையை கைப்பற்றி வங்கதேசம் அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது.
ஏசிசி யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா - வங்கதேசம் அணிகள் தகுதிபெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முகமது அமான் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் முகமது ஷிகாப் ஜேம்ஸ் - ரிசான் ஹோசன் இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய ஜேம்ஸ் 40 ரன்களும், ரிசான் ஹோசன் 47 ரன்களும் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களில் ஃபரித் ஹசன் மட்டும் 39 ரன்களை சேர்த்தார்.
இதன் காரணமாக வங்கதேசம் அணி 49.1 ஓவர்களில் 198 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குஹா, சேத்தன் சர்மா மற்றும் ஹர்திக் ராஜ் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி களமிறங்கியது. இதில் ஆயுஷ் மாத்ரே 1 ரன்னிலும், சூர்யவன்ஷி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த தமிழக வீரர் ஆன்ட்ரே சித்தார்த் 20 ரன்களில் ஆட்டமிழக்க, 44 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் வந்த கார்த்திகேயா 21 ரன்களிலும், நிகில் குமார் டக் அவுட்டாகியும் வெளியேற, இந்திய அணியின் பாடு திண்டாட்டமானது. தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங் 6 ரன்களிலும், கிரண் சோர்மாலே 1 ரன்னிலும், வெளியேற, கேப்டன் முகமது அமான் மட்டும் விக்கெட்டை காப்பாற்றி களத்தில் இருந்தார்.
நிதானமாக ஆடிய அவர் 65 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் வந்த ஹர்சித் ராஜ் 24 ரன்களும், சேத்தன் சர்மா 10 ரன்களும், குஹா 5 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 35.2 ஓவர்களுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் வங்கதேசம் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலமாக வங்கதேச யு19 அணி தொடர்ச்சியாக 2 முறை ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கு பின் இந்திய யு19 அணி ஒருமுறை கூட ஆசியக் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.