சென்னை: தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை ஜெய்ஷா சந்தித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்த தொடர் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் நடக்கிறது. இந்தத் தொடருக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தை ஜெய்ஷாவை சந்தித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய்ஷா ரஜினியை சந்தித்து இருப்பது எதனால் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டது. ஆனால் இதற்கு காரணம் உலகக்கோப்பை தொடருக்கான முன்னேற்பாடுதான் என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அதாவது உலகக் கோப்பை தொடரில் சிறப்பு அழைப்பாளராக அழைத்து எந்தவித பணமும் செலுத்தாமல் அனைத்து போட்டிகளையும் பார்க்கும் வசதி உடைய கோல்டன் டிக்கெட்டுகள் இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.
நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நினைத்தால் இந்த உலகக் கோப்பை தொடர் நடக்கும் எந்த மைதானத்திற்கு சென்றும் இலவசமாக பார்க்கலாம். நடிகர் ரஜினிகாந்த் ஒரு கால்பந்து ரசிகர் என்றாலும் கிரிக்கெட் போட்டிகளை அவர் அவ்வப்போது பார்த்ததுண்டு.
குறிப்பாக 2011 ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்தியாவும் இலங்கையும் மோதிய இறுதிப்போட்டியில் மும்பைக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் கண்டு களித்தார். அன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் வந்தால் மட்டும் போதும் என்று பிசிசிஐ இந்த ஏற்பாடு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டிக்கெட்டை பெறுவதற்கு சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் பல துன்பங்களை சந்திக்கும் நிலையில் விவிஐபிக்களுக்கு பிசிசிஐ இலவசமாக கோல்டன் டிக்கெட் வழங்குவது சரிதானா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விவிஐபிக்களுக்கு டிக்கெட் வாங்க பணம் இருக்காதா என்றும் அவர்கள் சாடி வருகிறார்கள்.