சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தற்போது அடி பாதாளத்தில் இருக்கிறது. அவர்கள் எப்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றார்கள் என்ற விவரம் அவர்களுக்கே மறந்து இருக்கும்.
அந்த அளவுக்கு கடந்த சில சீசன்களாக ஹைதராபாத் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. ஹைதராபாத் அணி விளையாடும்போது அவர்கள் மோசமாக செயல்பட்டால் அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறனின் முகம் பூ போல் வாடிவிடும்.

மேலும் காவியா மாறன் சோகத்தின் உச்சிக்கே சென்று விடுவார். அவர் கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்ஷனும் அப்போது வைரலாகும். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் நெட்வொர்க்கின் இன்னொரு அங்கம் தான் சன்ரைசர்ஸ் அணி என்பது அனைவருக்குமே தெரியும்.
இந்த மேடையில் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தயவுசெய்து சன்ரைசர்ஸ் அணியில் நல்ல வீரர்களை அடுத்த முறை தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் காவியா மாறனை தொலைக்காட்சியில் பார்க்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது என்று ரஜினி கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த பேச்சைக் கேட்டவுடன் அரங்கத்தில் இருந்த அனைவருமே சிரிக்க தொடங்கிவிட்டனர். ரசிகர்களின் மனதில் இருப்பதை நடிகர் ரஜினி தைரியமாக அணி உரிமையாளரிடமே கூறிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் சன்ரைசர்ஸ் அணி தொடர்பான இந்த பேச்சு தமிழக மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது. பலரும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் அணி ரஜினி சொன்னது போல் நல்ல வீரர்களை இனி தேர்வு செய்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு காவியா மாறனை அவ்வளவு சோகமாக பார்க்க மனம் வரவில்லை என்று பலரும் கிண்டல் அடித்திருக்கிறார்கள். ரஜினியின் இந்த பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியில் இருந்து பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.