சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனும் தமிழக வீரருமான ஸ்ரீகாந்த் குறித்து நடிகர் ஆர்.ஜே பாலாஜி தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சேவாக்கிற்கு எல்லாம் முன்பே, அதிரடியாக ஆடி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஸ்ரீகாந்த்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீகாந்த் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இந்திய அணியின் கேப்டனாகவும் ஸ்ரீகாந்த் செயல்பட்டு இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் 2011 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த தலைமை தேர்வு குழு உறுப்பினராகவும் ஸ்ரீகாந்த் செயல்பட்டு இருக்கிறார்.இந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீகாந்த் எப்போதுமே வீரர்களை ஒருமையில் பேசி வருவது குறித்து பல விமர்சனங்கள் இருந்தது.
ஆனால் அது அவருடைய இயல்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீகாந்த் குறித்து பிரபல நடிகர் ஆர் ஜே பாலாஜி தெரிவித்த கருத்து தற்போது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இது குறித்து பேசிய ஆர் ஜே பாலாஜி, ஸ்ரீகாந்த் சத்தமாக பேசுவார். டேய் என்று அழைப்பார் என்றெல்லாம் நாம் நினைப்போம்.
தொலைக்காட்சியில் பார்க்கும் ஸ்ரீகாந்திருக்கும் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் ஸ்ரீகாந்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு நாள் ஸ்ரீகாந்த் வீட்டிற்கு நான் சென்றேன். அப்போது அங்கு 20 நபர்கள் அவருடைய வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே ஸ்ரீகாந்த் வீட்டில் வேலை பார்த்தவர்களிடம் உங்களுக்கெல்லாம் என்ன பணி என்று கேட்டேன்.
அப்போது அவர்கள் எங்களுடைய மகன் எல்லாம் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள். சிலர் ஐடி நிறுவனத்தில் நிறைய சம்பாதிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஸ்ரீகாந்த் சார் தான். நாங்கள் இங்கு பணிக்கு வரும்போது உங்கள் வீட்டில் கடைசியாக தினக்கூலிக்கு செல்லும் நபர்கள் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். உங்களுடைய குழந்தைகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தற்போது எங்களுடைய குழந்தைகள் எல்லாம் நல்ல நிலைமையில் இருக்கின்றது. தற்போது நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை இருந்தாலும் ஸ்ரீகாந்த் சாருடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இங்கு வந்து பணிபுரிகிறோம் என்று கூறினார்கள். இதை கேட்டவுடன் நான் மனம் நெகிழ்ந்து விட்டேன் என்று பாலாஜி கூறியுள்ளார்.