டெல்லி: இந்திய அணியின் முழு நேர பயிற்சியாளர் வேலையெல்லாம் நமக்குச் சரிப்படாது. அதேசமயம், ஐபிஎல் போட்டிகளில் ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்-விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் கடந்த 2013ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடி வந்த அவர் அதன் பயிற்சியாளராகவும் இருந்தார்.
அதேபோல டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். இந்த அணி 2009ல் கோப்பையை வென்றது. தற்போது இந்த அணி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகச் சொன்னால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, சத்தியமாக என்னால் என்னை பயிற்சியாளராக நினைத்துப் பார்க்க முடியாது. அதுவும் முழு நேர பயிற்சியாளராக என்னால் செயல்படுவது கஷடம்.
முழு நேர பயிற்சியாளர் என்றால் இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். கமிட்மெண்ட் தேவை. அது நமக்கு சரிப்படாது. அதேசமயம், வேறு வாய்ப்புகளுக்கு நான் தயாராகவே இருக்கிறேன்.
ஐபிஎல் போட்டிகளை நான் நிறைய அனுபவித்துள்ளேன். எனவே அதில் ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற விரும்புகிறேன். அதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளேன் என்றார் கில்கிறைஸ்ட்.