
ஆஸ்திரேலியாவில் கொரோனா
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச், ஏப்ரலில் ஆஸ்திரேலியாவில் அதிகமாக இருந்தது. அப்போது உலகம் முழுவதும் வைரஸ் பரவி வந்ததால் கடும் லாக்டவுன் அமலில் இருந்தது. குறிப்பாக வயதானவர்களுக்கு தான் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதாக ஒரு தகவல் இருந்தது.

கேரளாவை சேர்ந்தவர்
அந்த சமயத்தில் தான் ஷரோன் வர்கீஸ் ஆஸ்திரேலியாவில் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்தார். அவர் கேரளாவில் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர். அவர் 2016இல் ஆஸ்திரேலியாவில் உள்ள வொல்லோகாங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நர்ஸிங் படிப்பை முடித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட முதியோர் இல்லங்கள்
படிப்பை முடித்த கையோடு, கொரோனா வைரஸுக்கு நடுவே வொல்லோகாங் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் பணிபுரிந்தார். ஆஸ்திரேலிய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் முதியோர் இல்லங்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு
அந்த நேரத்தில் முதியோருக்காக பணிபுரிந்த ஷரோன் வர்கீஸின் சேவையை பாராட்டி உள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட். ஒரு வெளிநாட்டவர் ஆஸ்திரேலியா மோசமான காலகட்டத்தில் இருந்த போது உதவி செய்துள்ளார் என்ற அடிப்படையில் அவர் பாராட்டினார்.

சுயநலமற்ற செயல்
ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டிப் பேசிய வீடியோவை ஆஸ்திரேலியா தொழில் மற்றும் முதலீடு கமிஷன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கில்கிறிஸ்ட், "ஷரோன், உங்கள் சுயநலமற்ற செயலுக்கு என் வாழ்த்துக்கள்" என கூறி உள்ளார்.

இரு நாடுகளும் பெருமைப்படும்
மேலும், "அந்த (கொரோனா வைரஸ் பாதிப்பு) நேரத்தில் நீங்கள் முழுவதுமாக முதியோர் இல்லத்தில் பணி புரிந்துள்ளீர்கள். ஆஸ்திரேலியா, இந்தியா முழுவதும், முக்கியமாக உங்கள் குடும்பம் உங்கள் செயல்களை கண்டு பெருமைப்படும்." என குறிப்பிட்டு பாராட்டி உள்ளார் கில்கிறிஸ்ட்.

மகிழ்ச்சியில் ஷரோன் வர்கீஸ்
கில்கிறிஸ்ட் பாராட்டியதை கண்டு மகிழ்ச்சியில் இருக்கிறார் ஷரோன் வர்கீஸ். அவர் கூறுகையில், தான் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் பணிபுரிய விரும்பியதாகவும், ஆனால், முதியோர் இல்லத்தில் பணி புரியவே வாய்ப்பு கிடைத்ததாகவும், அதை தான் அனுபவித்து செய்ததாக கூறினார்.


Click it and Unblock the Notifications











