
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அதில் அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியை
பகலிரவு போட்டியாக நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. ஆனால் இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து அடிலெய்ட் டெஸ்ட் பகல் டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு மூன்று டி-20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 21, 23, 25ல் மூன்று டி-20 போட்டிகள் நடக்கின்றன. டிசம்பர் 6, 14, 26, அடுத்தாண்டு ஜனவரி 3ல் என் நான்கு டெஸ்ட் போட்டிகள் துவங்க உள்ளன. அதைத் தவிர அடுத்தாண்டு ஜனவரி 12, 15, 18ல் மூன்று ஒருதினப் போட்டிகள் நடக்க உள்ளன.
இதில் அடிலெய்டு ஓவலில் டிச. 6ல் துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியது.
ஆனால், இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியும் என்று இந்திய அணி நம்புகிறது. பகலிரவு ஆட்டமாக நடந்தால், பிங்க் பாலில் விளையாட வேண்டும். இந்திய வீரர்களுக்கு அதில் அனுபவம் இல்லை. மேலும் பிங்க் பால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாகும். ஆஸ்திரேலியா வேகப்பந்தில் வலுவாக உள்ளதால், அது அந்த
அணிக்கே சாதகமாக அமைந்துவிடும். அடிலெய்டில் ஆஸ்திரேலியா இதுவரை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மூன்று பகலிரவு டெஸ்டில்
விளையாடியுள்ளது. அனைத்திலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
இந்தியாவின் இந்த எதிர்ப்பை ஆஸ்திரேலியா ஏற்றுக் கொண்டுள்ளது. அடிலெய்டில் நடக்கும் டெஸ்ட் போட்டியும் பகல் போட்டியாகவே நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.