ஆண்டிகுவா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தற்போது சொந்தமாகவே உணவுகளை தயாரித்து சாப்பிட்டு வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் லீக் சுற்று போட்டிகள் பெரும்பான்மையாக அமெரிக்காவில் நடைபெற்றது.
இதேபோன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் உள்நாட்டு குழப்பம், பொருளாதார குழப்பம் என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தான் தற்போது பலமாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இருக்கிறது.

இதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு பிரகாசமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் பல்வேறு பிரச்சனைகளை ஐசிசி தொடரில் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் இஸ்லாமிய முறைப்படி ஹலால் ஆன உணவு வகையிலேயே சாப்பிடுவார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஹலால் உணவு மற்றும் இறைச்சிகள் கிடைக்கவில்லை.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தாங்களே இறைச்சிகளை ஹலாலான முறையில் சமைத்து சாப்பிடும் நிலைக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டு ரசிகர்கள் யாரேனும் மைதானம் அருகில் இருந்தால் அவர்கள் ஹலாலான உணவு முறைப்படி சமைத்து ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள், தங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வெஸ்ட் இண்டீஸ் இல் ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். பல்வேறு நாடுகளை அடங்கிய தீவுகள் தான் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் ஒவ்வொரு முறையும் லக்கேஜுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எங்களால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றும் பல்வேறு தீவுகளில் ஹலால் உணவு முறைகள் கிடைப்பதில்லை என்பதால் தாங்களே சொந்தமாக சமைத்து உணவு சாப்பிடுவதாகவும் இதற்கு பல நேரம் செலவழிப்பது ஆகும் ஆப்கான் வீரர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் கடந்த முறை இந்தியாவுக்கு சென்றபோது எங்களுக்கு 24 மணி நேரமும் ஹலால் உணவு கிடைத்ததாகவும், அப்போது எங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி தான் ஆப்கான் வீரர்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.