லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இன்று ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பி பிரிவில் இன்னும் எந்த அணியும் அரை இறுதிக்கு செல்லவில்லை.
இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் அவர்கள் அரை இறுதி சுற்றுக்கு சென்று விடுவார்கள். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி இன்று வெற்றி பெற்றால், அவர்கள் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனால் கால் இறுதி ஆட்டம் போல் இது கருதப்படுகிறது. இந்த நிலையில் லாகூரில் நேற்று கன மழை பெய்ததால் இன்று போட்டி திட்டமிட்டு நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் தற்போது வானிலை நன்றாக முன்னேறி இருக்கிறது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் தான் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியா அணியும் விளையாடி இருந்தார்கள்".
"எனவே இன்றைய ஆட்டத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் தோய்வாக இருக்கும் என நினைக்கின்றேன். இது எங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நாங்கள் திட்டங்களை தீட்டு இருக்கிறோம்."
"கடந்த போட்டியில் நாங்கள் செய்த தவறை இன்றைய ஆட்டத்தில் திருத்திக் கொண்டு விளையாட நினைக்கின்றோம் "என கூறியுள்ளார் இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், "நாங்கள் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.ஏன் என்றால் இன்று மழை பெய்யுமா பெய்யாதா என்று எங்களுக்கு தெரியவில்லை. மேலும் பணிப்பொழிவும் நேற்று இருந்தது."
"எங்கள் அணியில் அனைவரும் நல்ல மன நிலையில் இருக்கிறார்கள். இன்றைய ஆட்டம் நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று உத்வேகத்துடன் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை" என்று ஸ்மித் கூறியுள்ளார்.