செயின்ட் வின்சென்ட்: 2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளின் அரை இறுதி வாய்ப்புக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. இந்தப் போட்டிக்கு பின் இந்தப் பிரிவின் புள்ளி பட்டியலில் உள்ள நிலையையும், இந்தியா, ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு குறித்தும் பார்ப்போம்.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +2.425 ஆக உள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் +0.223 ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான அணியும் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்த போதும் நெட் ரன் ரேட் -.0.650 ஆக இருப்பதால் மூன்றாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியடைந்து நான்காவது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி மோசமான நெட் ரன் ரேட் வைத்து இருப்பதால் அரை இறுதி செல்வது கடினம்.
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு எளிதாக செல்ல முடியும். ஒரு வேளை அந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை வீழ்த்தினால் அதிக நெட் ரன் ரேட் பெரும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
ஆப்கானிஸ்தான் அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நான்கு புள்ளிகளை பெறுவதோடு, ஆஸ்திரேலியாவின் நெட் ரன் ரேட்டை முந்த முடியும். ஒரு வேளை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்து, ஆப்கானிஸ்தான் அணியும் வங்கதேசம் அணியிடம் தோல்வி அடையும் பட்சத்தில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் இரண்டு புள்ளிகளுடன் இருக்கும்.
வங்கதேசத்தின் நெட் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால் அந்த அணி இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்பு இல்லை. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி அதிக நெட் ரன் ரேட் பெற்றுள்ளதோ அந்த அணி இறுதிக்கு முன்னேறும். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு மிக மோசமாக உள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தாலும், குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம்.