மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியா அணி தற்போது மிகப்பெரிய தடுமாற்றத்தை கண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உண்டு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அதன் பிறகு வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை அப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தி ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
அதாவது கிரிக்கெட்டில் யாருமே எதிர்பாராத ஒரு ஏமாற்றம் நடந்து விட்டது என்ற பொருளை இது குறிக்கும். இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர், ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் அணியின் இந்த மாபெரும் வெற்றியை அப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவர்களுடைய மரியாதையை குறைக்காதீர்கள்.
ஆப்கானிஸ்தான் அணி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள எந்த அணியையும் வீழ்த்தும் தன்மையை உடையது. ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா போன்ற ஒரு சிறந்த அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த வெற்றியை அனைவரும் கொண்டாட வேண்டுமே தவிர அப்செட் என்று கூறக்கூடாது.
ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று வசீம் ஜாஃபர் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டெயில் ஸ்டெயின், தங்களுக்கு எது வருமோ அதை சரியாக பயன்படுத்தி வெற்றியை பெற்றிருக்கிறார்கள். குண்டும் குழியுமான இருக்கும் சாலைகளில் ஃபெராரி போன்ற சொகுசு கார் தேவை இல்லை. அந்த சாலைக்கு ஏற்ற வகையில் சக்கரத்தை மாற்றிக்கொண்டு வாகனத்தை இயக்குங்கள். அதைத்தான் ஆப்கானிஸ்தான் செய்திருக்கிறது என தயவு செய்து பாராட்டுகிறார்.