அபுதாபி: வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடரில் டி20 தொடரை வங்கதேச அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
இந்த நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி முழுமையாக வென்று பதிலடி கொடுத்திருக்கிறது.அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய குர்பாஷ் 42 ரன்களிலும் இப்ராஹிம் சாட்ரான் 95 ரன்களிலும், செதிக்குல்லா அட்டல் 29 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகித் இரண்டு ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் இக்ராம் அகில் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதுபோன்று அஸ்மத்துல்லா உமர்சாய் 20 ரன்கள் எடுக்க முகமது நபி 37 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர், நான்கு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்திருக்கிறது. இதனை அடுத்து 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் வங்கதேச அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் சைப் கான் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். மற்ற 10 வீரர்களும் இரட்டை இலக்கம் ரன்களை தொடவில்லை. இதனால் வங்கதேச ஆணி 27.0 ஓவரில் 93 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சிறப்பாக பந்துவீசிய பிலால் சமி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று ரஷித் கான் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் ஒரு நாள் தொடரை வென்று டி20 தொடரை இழந்ததற்கு பதிலடி தந்துள்ளது. ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிலால் சாமி ஆட்டநாயகன் விருதையும் இந்த தொடரில் மொத்தமாக 213 ரன்கள் அடித்த இப்ராஹிம் சாம்ரான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.