கிங்ஸ்டவுன் : டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி முன்னேறியுள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ஜானத்தன் ட்ராட்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஏனென்றால் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்க ஜாம்பவான் வீரர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
அப்போது 2022ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார் ஜானத்தன் ட்ராட். 2013ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரின் போது ஆஸ்திரேலியா அணியின் கேலி, கிண்டல்களால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தவர். இங்கிலாந்து அணியின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக இருந்த ஜானத்தன் ட்ராட்-ஐ, மிட்சல் ஜான்சன் நடத்திய விதம் அதிர்ச்சியை கொடுத்தது.

இதனால் மனதளவில் தளர்ந்துவிட்டதாக கூறி ஜானத்தன் ட்ராட் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அப்போது இங்கிலாந்து ஜாம்பவான்கள் கூட ஜானத்தான் ட்ராட்-க்கு ஆதரவாக நிற்கவில்லை. அப்போது ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், ஜானத்தன் ட்ராட் எங்களை பார்த்து பயப்படுகிறார்.. பரிதாபமாக உள்ளது என்று வெளிப்படையாக கிண்டல் செய்தார்.
இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதனைவிட முக்கியமானது ஆஸ்திரேலியா அணியை வென்றது மட்டுமல்லாமல் நெட் ரன் ரேட்டில் கூட உள்ளே வரக் கூடாது என்று விரட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு பின் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஜானத்தன் ட்ராட்டை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
வெற்றி, தோல்வியின் போது எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாத ஜானத்தன் ட்ராட், இம்முறை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தார். கிட்டத்தட்ட உலகக்கோப்பையை வென்றுவிட்ட இந்திய அணி கேரி கிர்ஸ்டனை தூக்கி கொண்டாடிய பின், வேறு எந்த பயிற்சியாளரையும் எந்த வீரர்களும் தூக்கி கொண்டாடவில்லை. அந்த பெருமை ஜானத்தன் ட்ராட்-க்கு மட்டுமே கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்திவிட்டார் ஜானத்தான் ட்ராட். ஆனால் இம்முறை தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்காக காரணமாக அமைந்த ஆஸ்திரேலியாவை 11 ஆண்டுகளுக்கு பின் வந்து பழி தீர்த்துள்ளார் என்றே சொல்லலாம். உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஷ் என்று அனைத்தையும் வென்று ஆணவத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு, 11 ஆண்டுகளுக்கு பின் வந்து ஆஃப்கானிஸ்தான் அணி மூலமாக ஜானத்தன் ட்ராட் பழி தீர்த்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.