கிங்ஸ்டவுன் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பர் 8 சுற்று பிரிவில் வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியதன் மூலம் முன்னாள் சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் தான் எடுத்தது.
இதனால் வங்கதேச அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்கான் வீரர்கள் அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியையும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். இந்த நிலையில் ஆட்டத்தின் 12வது ஓவரின் போது மழை பெய்ய தொடங்கியது.

அந்த சூழலில் வங்கதேச அணி டக்வத் லூயிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் பின்தங்கி இருந்தது. மழையால் ஆட்டம் தடை பட்டாலும் வங்கதேச அணி தோல்வியை தழுவினாலும், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும். இதனால் போட்டியை நிறுத்துவதற்காக பயிற்சியாளர் ஜனார்த்தனன் டிராட், எல்லைக்கோட்டில் நின்று கொண்டு மழை பெய்கிறது போட்டியை தாமதப்படுத்துங்கள் என்று சைகை காட்டினார்.
இதனை பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒரு பெரிய நாடகத்தை போட்டனர். நூர் அகமத் பந்து வீசி கொண்டிருந்தபோது ஸ்லிப்பில் நின்ற குலாப்தீன் திடீரென்று காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது என்று கூறி கீழே விழுந்தார். அந்த சூழலில் வங்கதேச அணி இரண்டு ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் மழையும் அதிகரிக்க தொடங்கியது. இதனை அடுத்து போட்டியை நடுவர்கள் நிறுத்தினர்.
இதை அடுத்து மீண்டும் 10 நிமிடம் கழித்து போட்டி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு ஓவர் குறைக்கப்பட்டு இலக்கு 114 ரன்கள் ஆக மாற்றப்பட்டது. முடிவில் வங்கதேச அணி 105 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் திறமையாக விளையாடி செயல்பட்டாலும் கிரிக்கெட்டின் விதிகளை பயன்படுத்தி சூழ்ச்சியும் செய்திருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆஸ்திரேலியா வெளியே செல்ல வேண்டும் என்றால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டி வருகின்றனர். முதல் அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோத உள்ளது. ஆப்கானிஸ்தான அணி இறுதி சுற்றுக்கு சென்று இருப்பதையும் ஆஸ்திரேலியா வெளியேறி இருப்பதையும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கொண்டாடி வருகிறது.