லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இப்ராஹிம் சத்ரான் அடித்த இமாலய சதம் தான் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், ஆல் ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார்.
இந்தப் போட்டியில் அவர் பேட்டிங்கின் போது 31 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்ததோடு, பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 59 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் கடைசி நேரத்தில் ஜோ ரூட், ஜேமி ஓவர்டன் மற்றும் அதில் ரஷீத் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினார். அதுவே இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவியது. இதன் மூலம் அவர் மாபெரும் சாம்பியன்ஸ் டிராபி சாதனையை செய்து இருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே ஒரே போட்டியில் 40 ரன்களுக்கு அதிகமான ஸ்கோர் மற்றும் ஐந்து விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தார் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார். முன்னதாக ஜாக்கஸ் காலிஸ், மக்காயா நிதினி, ஜேக்கப் ஓரம் மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக ஆடியது. இப்ராஹிம் சத்ரான் துவக்க வீரராக இறங்கி விக்கெட் வீழ்ச்சிகளுக்கு நடுவே சிறப்பாக விளையாடினார். கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி 40 ரன்களும், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 31 பந்துகளில் 41 ரன்களும், முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர். இதை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது.
அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது அந்த அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் அபாரமாக ஆடி 120 ரன்கள் சேர்த்தார். பென் டக்கெட் 38 ரன்கள் சேர்த்து இருந்தார். ஜோஸ் பட்லர் 38 ரன்கள் எடுத்தார். ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த போது, சரியாக 46வது ஓவரில் ஜோ ரூட் விக்கெட்டை அஸ்மதுல்லா ஓமர்ஜாய் வீழ்த்தினார். அது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.
அதை தொடர்ந்து ஜேமி ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத் ஆகியோரின் விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தன. முன்னதாக பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய். கடைசி நேரத்தில் அவர் ஜோ ரூட் மற்றும் அதில் ரஷீத் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதை அடுத்து 41 ரன்கள் மற்றும் ஐந்து விக்கெட் வீழ்த்தி அவர் சாதனை படைத்தார் ஓமர்ஜாய். அவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதி செல்லும் வாய்ப்பையும் இழந்தது.