லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறியிருக்கிறது.
இதன் மூலம் 2023 50 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இரண்டு ஐசிசி தொடரிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், "சாம்பியன்ஸ் தொடரின் முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருப்பது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் கூட நாங்கள் பல வெற்றி வாய்ப்புகளை பெற்றிருந்தோம். ஆனால் எங்களுக்கான வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரூட் அபாரமான ஒரு இன்னிங்ஸை விளையாடினார். ஆனால் அவருக்கு எங்கள் அணியின் டாப் 6 வீரர்களில் ஒருவர் கூட துணை நிற்கவில்லை."
"நாங்கள் பந்து வீசும் போது கடைசி பத்து ஓவரில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தோம். அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிமுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.அவர் அற்புதமான இன்னிங்ஸை ஆடி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். கடைசி 10 ஓவரில் 113 ரன்கள் கொடுத்ததெல்லாம் மோசமான விஷயமாக நான் நினைக்கின்றேன்."
"அதன் மூலம் இந்த ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இதேபோன்று மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் காயத்தையும் மீறி அவர் தொடர்ந்து பந்து வீசினார். மார்க் வுட் இல்லாத நிலையில் நாங்கள் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து கடைசி கட்ட ஓவர்களை வீசினோம். லிவிங்ஸ்டோனும் காயம் காரணமாக முதலில் வெளியேறி பின் கடைசி கட்டத்தில் வந்தார்."
"ரூட் இங்கிலாந்து அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் பிரமாதமாக விளையாடி வருகிறார். நெருக்கடியான கட்டத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை எங்களுக்கு ஜோரூட் காட்டி இருக்கிறார். கிரிக்கெட் போல் ஒருநாள் கிரிக்கெட் விடும் அவருடைய ரெகார்ட் பிரமாதமாக இருக்கின்றது. நான் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்துவிட்டு நான் நன்றாக விளையாடாமல் போனது ஏமாற்றமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் உணர்ச்சிவசத்தில் எந்த முடிவையும் எடுக்க கூடாது என நினைக்கின்றேன்" என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.