லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகரித்து உள்ளது. ஆஸ்திரேலியா உடனான போட்டியில் மிகப்பெரிய விஷயம் நடக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது பற்றி முழுமையாக பார்க்கலாம்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்த எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அரையிறுதி முன்னேறும் வாய்ப்பை இழந்து இருக்கின்றன.

குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் மூன்று புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான் தற்போது இங்கிலாந்து அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து உள்ளது.
குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே அரையிறுதி முன்னேறுவதற்கான போட்டி நிலவி வருகிறது. தற்போது இதில் முக்கியமான போட்டியாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மாறி இருக்கிறது.
அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை உள்ளது. ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டால் நேரடியாகவே 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி விடும். ஏனெனில், ஆஸ்திரேலியா தற்போது மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று இருப்பதால் ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை விட ஒரு புள்ளி அதிகம் பெற்றிருக்கும். அதன் மூலம் அரையிறுதிக்கும் முன்னேறும். ஆஸ்திரேலியாவின் நெட் ரன் ரேட் தென்னாப்பிரிக்காவை விட குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.
மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்தாலும் மூன்று புள்ளிகள் உடன் இருக்கும். அப்போது அந்த அணியின் நெட் ரன் ரேட் மிக அதிகமாக இருப்பதால் ஆஸ்திரேலியாவை விட அதிக நெட் ரன் ரேட் பெற்றிருக்கும். அதன் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தாலும் மூன்று புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட் மூலம் ஆஸ்திரேலியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தி விட்டால் ஐந்து புள்ளிகள் உடன் குரூப் பி பிரிவில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். எனவே, தற்போது தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு 90 சதவீதம் உறுதியாகி இருக்கிறது. எனவே, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான போட்டி ஒரு கால் இறுதி போட்டியாக மாறி இருக்கிறது.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா போட்டியில் மழை பெய்தால் ஆப்கானிஸ்தான் அணி மூன்று புள்ளிகளை மட்டுமே பெறும். அப்போது அந்த அணியின் நெட் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால் தென்னாப்பிரிக்காவை முந்தி அரையிறுதிக்கு முன்னேற முடியாது. மறுபுறம் மழையால் போட்டி கைவிடப்பட்டால் ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகளை பெற்று அரை இறுதிக்கு முன்னேறும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.