மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இப்ராகிம் சாட்ரான் 146 பந்துகளில் 177 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 325 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 317 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி என இரண்டு தொடர்களுமே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.
இந்த மூன்று ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்தது. அப்போது தொடர் முடிந்தவுடன் பேசிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட், ஒரு நாள் தொடரில் நாங்கள் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருக்கலாம். இது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
எங்களுடைய கவனம் எல்லாம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் இருக்கிறது. அந்த தொடரில் பைனலில் நாங்கள் இந்தியாவை எதிர் கொண்டு நிச்சயமாக அவர்களை வீழ்த்தி பழி தீர்ப்போம் என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் தோல்வியை தழுவி இங்கிலாந்து அணி முதல் சுற்றிலே தொடரை விட்டு வெளியேறி உள்ளது.
இந்த நிலையில் பென் டக்கட் பேச்சை சுட்டிக்காட்டி இருக்கும் ரசிகர்கள் பேச்சா டா பேசினீங்க என்பது போல் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இங்கிலாந்து அணி வாய் வித்தையில் மட்டும்தான் பேசுவதாகவும் களத்தில் சொதப்புவதாகவும் பலரும் குற்றச்சாட்டி உள்ளனர். அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் இங்கிலாந்து அணி வெற்றியை இழந்து வருவதாகவும் ரசிகர்கள் விமர்சித்து இருக்கிறார்கள்.