பார்படோஸ்: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானின் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் இந்த தோல்வி குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
அப்போது ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் பும்ராவின் பந்துவீச்சு தான் என குறிப்பிட்டு பேசினார். போட்டிக்கு முன்னதாக பும்ராவை எப்படி எதிர்கொள்வது, அவரது பந்துவீச்சில் எப்படி ரன் குவிப்பது என திட்டமிட்டதாகவும், ஆனால் களத்தில் அந்தத் திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாமல் போனதாகவும், அதனால் பெரும் ஏமாற்றமாக இருப்பதாகவும் ஜொனாதன் ட்ராட் கூறினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 181 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய கேப்டன் ரஷீத் தான் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது இந்திய அணியின் பும்ரா வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவரது பந்துவீச்சில் 24 பந்துகளில் 20 டாட் பால்களை ஆடி ஏமாற்றம் அளித்தனர். பும்ரா 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இது குறித்து ஜொனாதன் ட்ராட் பேசுகையில், "எந்த ஒரு அணியாக இருந்தாலும் பும்ரா தான் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார். இந்தியாவைப் பொறுத்தவரை அவர் மிக முக்கியமானவர். நாங்கள் அவருக்கு எதிராக நன்றாக விளையாட வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், போட்டி முடிவில் பும்ராவின் செயல்பாட்டை பார்க்கும்போது, நாங்கள் சரியாக விளையாடவில்லை என்பது தெரிகிறது. நாங்கள் போட்டிக்கு முன் பும்ரா பற்றி நிச்சயம் பேசினோம். அவரை எப்படி ஆட வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், எங்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. அது எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது" என்றார்.
அடுத்து ரஷித் கான் பந்து வீச்சு குறித்து பேசிய போது, "26 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்கள் வீழ்த்துவது என்பது மிகவும் சிறந்த பந்து வீச்சு. ரஷித் கான் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், ஒரு பந்துவீச்சாளரை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் ஆட முடியாது. மீதமுள்ள 16 ஓவர்களை மற்ற வீரர்கள் வீச வேண்டும். அவர்களும் பொறுப்பை உணர்ந்து திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். ஆனால், ரஷித் தான் இன்று சிறப்பாக செயல்பட்டார். அவர் மீது அவருக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதை அவர் இன்று பூர்த்தி செய்தார். மற்றவர்களும் அதை பின்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்.