நொய்டா: இந்தியாவில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. அதை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடுவதற்காக தற்காலிக ஸ்பின் பவுலிங் ஆலோசகராக இலங்கை ஜாம்பவான் ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ரங்கனா ஹெராத் டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்களை வீழ்த்திய ஜாம்பவான் ஆவார். இலங்கை அணியின் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் ஆவார். முன்னாள் பாகிஸ்தான் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் நியூசிலாந்தின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். அவர் தற்போது விலகி இருக்கும் நிலையில், ரங்கனா ஹெராத் தற்காலிகமாக அவரது பணியை தொடர உள்ளார்.

நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இலங்கை டெஸ்ட் தொடருடன் ரங்கனா ஹெராத்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது நியூசிலாந்து அணியுடன் இருக்க மாட்டார். எனினும், இந்த ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்பின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட ரங்கனா ஹெராத்தை நியூசிலாந்து அணி பயன்படுத்திக் கொள்ளும்.
இந்தியா மற்றும் இலங்கை ஆடுகளங்கள் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதில் எப்படி சிறப்பாக பந்து வீசுவது என்ற ஆலோசனைகளை நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்களான அஜாஸ் பட்டேல், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பெறுவார்கள்.
இதில் முக்கியமான ஒரு விஷயமும் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. ரங்கனா ஹெராத் தலைசிறந்த இடது கை ஆர்த்தடாக்ஸ் டெஸ்ட் ஸ்பின்னராக அறியப்பட்டவர். தற்போது நியூசிலாந்து அணியில் இடம் பெற்று இருக்கும் அஜாஸ் பட்டேல், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய மூவருமே இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர்கள் தான்.
எனவே, ரங்கனா ஹெராத்தை தற்காலிக ஆலோசகராக நியமிப்பதன் மூலம் மிகப்பெரிய அளவில் அவரது அறிவை இந்த மூன்று இடது கை ஸ்பின்னர்களும் பெற முடியும். அது நியூசிலாந்து அணியின் டெஸ்ட் போட்டி செயல்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி நொய்டாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நொய்டாவில் வரும் செப்டம்பர் 9 முதல் துவங்க உள்ளது. அடுத்து இலங்கைக்கு செல்லும் நியூசிலாந்து அணி அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 18 அன்றும், இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 26 அன்றும் துவங்கி நடைபெறும். அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கல்லே மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியா வர உள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அக்டோபர் 16 அன்று பங்கேற்க உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 24 அன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், நவம்பர் 1 அன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க உள்ளது.