டெல்லி: ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக புனே எப்படி மாறியதோ அதுபோல, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாதான் சொந்த மைதானமாகி உள்ளது. இங்கு வங்கதேசத்துடன் அது விளையாட உள்ளது.
டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக ஜூன் மாதம் 14ம் தேதி பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு, டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில்தான் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, வங்கதேசம் அணியுடன் ஆப்கானிஸ்தான் 3 டி-20 போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள், உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வரும் ஜூன் 3, 5, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் சொந்த மைதானமாக டேராடூன் இருக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக சென்னை சேப்பாக்கம் இருந்தது. ஆனால், போராடட்ங்களால் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, சிஎஸ்கேவின் சொந்த மைதானமாக புனே மாறியது.
அதுபோல, ஆப்கானிஸ்தானின் புதிய சொந்த மைதானமாக இந்தியா மாறியுள்ளது. ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் இதற்கு முன், 2014ல் நடந்த டி-20 உலகக் கோப்பையில் ஒருமுறை விளையாடியுள்ளன. அதில் வங்கதேசம் வென்றுள்ளது.
தற்போதைய ஐசிசியின் டி-20 தரவரிசையில் ஆப்கானிஸ்தான் 8வது இடத்திலும், வங்கதேசம் 10வது இடத்திலும் உள்ளன.