சார்ஜா: சார்ஜாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நான்காவது லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்தியது. இந்த தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போது பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது முறை மோதும் போது, பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கின்றார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் குர்பாஸ் 8 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த செதிக்குல்லா ஆடல் மற்றும் இப்ராஹீம் சாட்ரன் அபாரமாக விளையாடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது. இது ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். செதிக்குல்லா அட்டல் 45 பந்துகளில் 64 ரன்களிலும்,இப்ராஹிம் சாட்ரன் 45 பந்துகளில் 65 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் பஹீம் அஷ்ரப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர் ஷயிம் அயூப் கோல்டன் டக் ஆக, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பர்ஹான் மற்றும் பக்கர் சமான் நிதானமாக விளையாடினர். இதில் பக்கர் சமான், உமர்சாய் வீசிய ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்குள் வந்தவுடன் பாகிஸ்தான் அணி தடுமாறியது. குறிப்பாக ரஷீத் கான், முஹம்மது நபி மற்றும் சிஎஸ்கே வீரர் நூர் அகமது அபாரமாக பந்துவீசி பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து மொத்தமாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனால் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்றது. இந்த நிலையில் ஹரிஷ் ரவுப் மட்டும் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் யாரும் துணை நிற்காததால் பாகிஸ்தான் அணி அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்று இருக்கின்றனர்.