உலகக்கோப்பை அணிகளுக்கு எச்சரிக்கை.. ஆசிய கோப்பைக்கு பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் பேச்சு
துபாய் : தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. எனினும், அந்த அணி இந்த தொடரில் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் அணியை இதுவரை குறைத்து எடை போட்டு வந்த காலம் முடிந்து விட்டது என அந்த அணி வீரர்கள் மற்ற அணிக்கு உணர்த்தியுள்ளார்கள். ஆசிய கோப்பையில் இரண்டு குரூப் சுற்று போட்டிகளில் இலங்கை, வங்கதேச அணிகளை வீழ்த்தியது. அடுத்து சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு எதிராக கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு எதிராக டை செய்து அதிர்ச்சி அளித்தது ஆப்கன்.
ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் மிக அழுத்தமாக, வெளிப்படையாக சில விஷயங்களை பேசியுள்ளார். இது மற்ற கிரிக்கெட் ஆடும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இருக்கிறது.

இறுதியில் இருக்க வேண்டியவர்கள்
ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் தங்கள் ஆசிய போட்டி நிலை குறித்து பேசினார். "நாங்கள் எல்லா போட்டிகளையும் துபாயில் ஆடி இருந்தால், இந்நேரம் நாங்கள் இறுதியில் இருந்து இருப்போம். துபாய் ஆடுகளத்தின் நிலை பற்று எங்களை விட யாருக்கும் நன்றாக தெரியாது. ஆனால், இரண்டு போட்டிகளை நாங்கள் அபுதாபியில் ஆடினோம். வெற்றிக்கு மிக நெருக்கமான அந்த போட்டிகளை எங்களால் வெல்ல முடியவில்லை" என கூறினார். இந்தியா தன் அனைத்து ஆசிய கோப்பை போட்டிகளையும் துபாயில் ஆடி வருவது குறிப்பிடத்தகக்கது.

உலகக்கோப்பை அணிகளுக்கு எச்சரிக்கை
"நாங்கள் தலை நிமிர்ந்து நிற்போம். இந்த முறை எங்கள் ஆட்டம் எங்களுக்கு பெருமை அளிக்கிறது. நினைவில் கொள்ளுங்கள். இது உலகக்கோப்பை அணிகளுக்கான எச்சரிக்கை" என தில்லாக பேட்டியில் கூறி இருக்கிறார் ஆப்கன் கேப்டன். இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெரிய திட்டமில்லாமல் களம் இறங்கும் அணிகள், இனியும் அப்படி வர முடியாது என்பது உண்மை தான். அதை தான் குறிப்பிடுகிறார் அஸ்கார் ஆப்கன்.

வித்தியாசமான சுழல்
ஆப்கன் அணியின் சுழல் பந்துவீச்சு தான் அந்த அணியின் பெரிய ஆயுதம். அதைப் பற்றி பேசிய அஸ்கார், "எங்கள் சுழல் பந்துவீச்சாளர்கள் எங்கே வேண்டுமானாலும் பந்து வீசுவார்கள். அவர்கள் வித்தியாசமான சுழல் பந்துவீச்சாளர்கள். உலகில் உள்ள மற்றவர்களை விட இவர்கள் வித்தியாசமானவர்கள்" என குறிப்பிட்டார்.

அடுத்து பேட்டிங்கும் மாறும்
ஆப்கன் அணியில் பேட்டிங் முன்பு கவலைக்குரியதாக இருந்தது. எனினும், இப்போது ஆசிய கோப்பையில் பேட்டிங் நன்றாகவே இருந்தது என கூறுகிறார் அஸ்கார். உலகக்கோப்பைக்கு முன்பு நங்கள் அதை இன்னும் மெருகேற்ற வேண்டும் என கூறினார்.


Click it and Unblock the Notifications