அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஏமாற்றமாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருப்பது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளரிடம் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா, இந்த வெற்றியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். இது எங்களுக்கு கிடைத்த மிக சிறந்த வெற்றி. தற்போது எங்கள் அணியின் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அடுத்த போட்டியில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்.
ஒட்டுமொத்த நாடுமே தற்போது மகிழ்ச்சியில் இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் எங்களை பார்த்து பெருமைப்படுவார்கள் என நினைக்கிறேன். தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.எனினும் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். எனினும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மைதானத்தில் 280 முதல் 290 அடித்தாலே போதும் என நான் நினைத்தேன்.
அதற்கு தகுந்தார் போல் நாங்கள் விளையாடினோம். இளம் வீரர் இக்ராம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எனக்கும் எங்களுடைய பயிற்சியாளருக்கும் அவர் மீது நிறைய நம்பிக்கை இருந்தது.அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம்.இங்கிலாந்து அணி எவ்வளவு அதிரடியாக விளையாடுவார்கள் என்று ஒட்டுமொத்த உலகத்துக்கே தெரியும்.
எங்களிடையே நம்பிக்கை இருக்கிறது. எங்களிடையே திறமையும் இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளாக நாங்கள் நன்றாக விளையாடினாலும் சரியாக போட்டியை முடிக்கவில்லை. ஆனால் தற்போது வெற்றியை பெற்று விட்டோம்.இனி எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக பாசிட்டிவாக இனி விளையாடுவோம். இது 2015 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி ஆகும். ஆனால் நிச்சயமாக இது கடைசி கிடையாது என ஹஸ்மத்துல்லா கூறியுள்ளார்.