புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முன்னாள் சாம்பியனான இலங்கையை வீழ்த்தி அபார சாதனையை படைத்திருக்கிறது.

உலக கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் 17 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில் தற்போது கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.
அதுவும் குறிப்பாக பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை போன்ற பலம் வாய்ந்த அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜனார்த்தன் டிராட் செய்த ஒரு சின்ன முயற்சி காரணமாக அமைந்திருக்கிறது. தோனி சொல்வது போல் திட்டத்தை வகுத்து பயிற்சி மட்டுமே செய்யுங்கள். முடிவு தானாக வரும் என்பார்.
அதை போல் நேற்றைய ஆட்டத்தில் ஜனார்த்தன் டிராட், இலங்கை நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை எவ்வாறு துரத்த வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அந்தத் திட்டத்தை ஆப்கானிஸ்தான் வீரர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ஒரு வெள்ளை நிற போர்டில் எந்த ஓவருக்குள் எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு வைத்திருந்தார்.
அதில் 10 ஓவரில் 50 ரன்கள், 20 ஓவருக்குள் 100 ரன்களும், 30 ஓவருக்குள் 150 ரன்களும் 40 ஓவருக்குள் 200 ரன்கள் 48 ஓவருக்குள் 242 ரன்களும் அடிக்க வேண்டும் என அவர் வெள்ளை நிற போர்டில் எழுதி வைத்திருந்தார். அதை பார்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் சரியாக அந்த இலக்கை நகர்த்தி சென்றனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 45.2 வது ஓவரிலேயே 242 ரன்கள் என்று இலக்கை எட்டியது.

இவ்வாறு இலக்கை பிரித்து சிறிது சிறிதாக மாற்றும் போது அதனை துரத்துவதற்கு எளிதாக இருக்கும். பாரம்பரிய கிரிக்கெட்டை விளையாடும் வீரர்கள் எல்லாம் இத்தகைய ஒரு செயல்முறையை தான் கையில் எடுத்து விளையாடுவார்கள். தற்போது அதேபோல் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜனார்த்தன் டிராட் செய்த முயற்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.