காபூல்: உலக கோப்பை படுதோல்வி எதிரொலி காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு இளம் வீரர் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. படுதோல்வியுடன் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. ரஷித் கான், முகமது நபி என முழுமையாக சுழற்பந்துவீச்சை மட்டுமே நம்பியிருந்த ஆப்கானிஸ்தால் எதிர்பார்த்தவாறு சோபிக்க முடியவில்லை.

படுதோல்வி காரணமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அணியின் கேப்டனையும் மாற்றி இருக்கிறது. ஒரு நாள், டெஸ்ட், டி 20 அனைத்து கிரிக்கெட்டுக்கும் ரஷித் கானும், கேப்டனாக நியமிக்கப்பட்டார். அஸ்கர் ஆப்கான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
உலக கோப்பை தொடரில் குல்புதினை கேப்டனாக்கியதற்கு ரஷித் கானும், முகமது நபியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தற்போது ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அணியின் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.
ரஷித் கான் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். அவர் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, ஹைதராபாத் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. 20 வயதே ஆகும் ரஷித் கான், தற்போது சர்வதேச கிரிக்கெட் அணியில் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.