காபூல்: பிரபல ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லாவின் இரண்டு வயது மகள் காலமான நிகழ்வு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 26 வயது ஆன ஹஸ்ரதுல்லா ஆப்கானிஸ்தான் அணிக்காக 16 சர்வதேச ஒரு நாள் போட்டிகளும், 45 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக 62 பந்துகளில் 162 ரன்கள் குவித்து ஹஸ்ரத்துல்லா ஷசாய் உலகப் புகழ்பெற்றார். ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து யுவராஜ் சிங் சாதனையும் ஹஸரத்துல்லா சமன் செய்து இருக்கிறார்.

இதேபோன்று சர்வதேச t20 கிரிக்கெட்டில் 12 பந்துகளில் அரை சதம் அடித்து யுவராஜ் மற்றும் கெயில் சாதனையையும் ஹசரத்துல்லா சமன் செய்துள்ளார். இந்த சூழலில் கடைசியாக டிசம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் ஹஸரத்துல்லாஹ் இடம்பெறவில்லை.
தனது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் விளையாடவில்லை. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அணியின் சக வீரரான கரீம் ஜன்னத் தனது சமூக வலைத்தளத்தில் இந்த சோகமான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் "இந்த சோகமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நான் மன வேதனை அடைகின்றேன்.
என்னுடைய நெருங்கிய நண்பரும் என்னுடைய சகோதரர் போன்றவருமான ஹஸ்ரத்துல்லா தன்னுடைய மகளை இன்று இழந்து விட்டார். இதை கேட்கும் போது எங்களுடைய உள்ளம் வலிக்கின்றது. இதயம் முழுவதும் சோகத்தால் நிரம்பி இருக்கின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் அனைவரும் ஹஸரத்துல்லாவின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக நிற்கின்றோம்.
உங்களுடைய தொழுகையிலும் பிரார்த்தனையிலும் ஹஸ்ரத்துல்லா குடும்பத்தினரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இழப்பை அவர்கள் கடந்து வர பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று ஹஸ்ரத்துல்லாஹ் மகளுக்கு கரீம் ஜன்னத் இரங்கல் தெரிவித்துள்ளார்.