காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
திங்கட்கிழமை இரவு காபூலில் உள்ள ஒரு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல் ஹக், "காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூரமான தாக்குதலுக்கும் எந்தவொரு வித்தியாசத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை" என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதேபோல் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். "ரமலான் மாதத்தில் அப்பாவி மக்களின் உயிர்களை துச்சமாக மதித்து, வீடுகள் மற்றும் மருத்துவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய போர்க்குற்றம்" என அவர் சாடியுள்ளார். மேலும், இந்த கொடூரமான தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மற்றொரு மூத்த வீரரான முகமது நபி தனது எக்ஸ் பக்கத்தில், "காபூலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர். ரமலான் மாதத்தின் 28 வது நாளில் தங்களின் மகன்களின் பெயர்களைச் சொல்லி தாய்மார்கள் மருத்துவமனை வாசலில் கதறி அழுவது நெஞ்சை உலுக்குகிறது" என வேதனை தெரிவித்துள்ளார்.

அஸ்மத்துல்லா உமர்சாய் தனது பதிவில், "நோன்பு திறந்த பிறகு நடந்த இந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க பிரார்த்திக்கிறேன்" என உருக்கமாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர்களின் இந்த பதிவுகள் இணையத்தில் பரவி வருகின்றன.
