காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் பாகிஸ்தான் இத்தாக்குதலை மறுத்தபோதும், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி நீதி கோரினர். இந்தச் சம்பவம், இரு நாடுகள் உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷித் கான் தனது 'X' சமூக வலைத்தளத்தில், "காபூலில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த சமீபத்திய செய்திகள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டு, வான்வழித் தாக்குதல்களில் மக்கள் வசிக்கும் இடங்கள், கல்வி அல்லது மருத்துவக் கட்டமைப்புகள் தாக்கப்படுவதை போர்க்குற்றம் என வலியுறுத்தினார்.

"காபூலில் நடந்த பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த சமீபத்திய செய்திகள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் வசிக்கும் வீடுகள், கல்வி வசதிகள் அல்லது மருத்துவக் கட்டமைப்புகளை, வேண்டுமென்றே அல்லது தற்செயலாகத் தாக்குவது ஒரு போர்க்குற்றம். குறிப்பாக ரமலான் புனித மாதத்தில் மனித உயிர்கள் மீது காட்டப்படும் அலட்சியம் மிகவும் அருவருப்பானது மற்றும் ஆழ்ந்த கவலையளிக்கிறது."

"இது பிரிவினையையும் வெறுப்பையும் மட்டுமே தூண்டும். ஐ.நா மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் இந்தச் சமீபத்திய அட்டூழியத்தை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கான் மக்களுடன் நான் நிற்கிறேன். நாம் குணமாகி, ஒரு தேசமாக எழும்புவோம். நாம் எப்போதும் செய்கிறோம். இன்ஷா அல்லாஹ்!" என்று ரஷித் கான் பதிவிட்டுள்ளார்.
மூத்த வீரர் முகமது நபி தனது 'X' பதிவில், "இன்று இரவு காபூலில், ஒரு மருத்துவமனையில் நம்பிக்கை அணைக்கப்பட்டது. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியின் குண்டுவெடிப்பில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தாய்மார்கள் வாயில்களில் காத்துக்கொண்டு தங்கள் மகன்களின் பெயர்களை அழைத்தனர். ரமலானின் 28வது இரவில், அவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது," என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டிருந்தார்.

டி20ஐ அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரான், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்தார். "இன்று இரவு காபூலில் ஒரு பெரும் வெடிப்பைக் கேட்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து தீப்பிழம்புகள் வானத்தை நோக்கி எழுவதைப் பார்த்தோம். நாளை நோன்பு நோற்க எண்ணியிருந்த நம் சகோதரர்கள் இப்போது உயிரிழந்துவிட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இன்று இரவு துயரத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துடனும் என் எண்ணங்கள் உள்ளன. காபூல் வலியில் உள்ளது. நீதி கிடைக்கும் என்று பிரார்த்திக்கிறோம்," என அவர் தெரிவித்தார்.