டெல்லி : எங்கள் நாட்டில் கிரிக்கெட் மட்டும்தான் மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரே விஷயமாக இருக்கிறது என ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் குறித்து ஒரே வரி கூறி இருப்பார்.
இந்த வரிக்குள் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று இந்த ஒரு விஷயத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்து விடும். போராலும், அந்நிய நாட்டுப் படையெடுப்பாலும், தீவிரவாத தாக்குதலாலும் ஆப்கானிஸ்தான் கடந்த காலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் மட்டும்தான் ஒரே ஒரு மகிழ்ச்சியை தரும் விஷயமாக இருக்கிறது. அண்மையில் கூட ஏற்பட்ட நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை வெகுவாக பாதித்தது. இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அணி தற்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடி வந்தாலும் அவர்களால் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியவில்லை.ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் தாங்கள் செய்த தவறை திருத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி இன்று இங்கிலாந்தை பொளந்தது.
இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியை மைதானத்தில் கண்ட ஆப்கானிஸ்தான் சிறுவன் ஒருவர் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழத் தொடங்கினார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் அந்த சிறுவனை அழைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அப்போது அந்த சிறுவன் ஆப்கானிஸ்தான் வீரர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்.
இதை பார்க்கும் போது அங்கு இருந்தவர்களின் கண்களில் தானாகவே நீர் வந்தது. இதை அடுத்து அந்த சிறுவனை சமாதானப்படுத்திய ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவருக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 20 ஆண்டுகளாக வெறும் போரையும் பூகம்பத்தையும் மட்டுமே பார்த்து வந்த ஆப்கானிஸ்தானுக்கு தற்போது கிரிக்கெட் மட்டும்தான் விடிவெள்ளியாக இருக்கிறது.