சென்னை : உலகில் மிகவும் கிரிக்கெட் அறிவு உடைய ரசிகர்கள் கொண்ட நகரம் என்றால் அது சென்னை தான் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இந்தியாவில் தங்களுடைய சொந்த அணிகள் நன்றாக விளையாடினால் மட்டுமே மற்ற நகர ரசிகர்கள் எல்லாம் பாராட்டுவார்கள்.
ஆனால் சென்னையில் மட்டும் தான் எந்த அணி நன்றாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்யும் பழக்கம் இருக்கிறது.
இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா விளையாடாத எந்தப் போட்டிக்குமே ரசிகர்கள் அதிக அளவு வருவதில்லை.

ஆனால் சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிக்குமே நல்ல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதேபோல் வட இந்தியாவில் பாகிஸ்தான் அணி மோதிய ஆட்டத்தில் அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்சனைகளும் மனக்கசப்பான சம்பவங்களும் நிகழ்ந்தது.இந்த நிலையில் அதனை மறக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு லட்சம் கூட கூடிய அகமதாபாத்தில் ஒரு பச்சை நிற ஜெர்சி கூட இல்லை.
ஆனால் இங்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்ட போதெல்லாம் சென்னை ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
பாகிஸ்தானுக்காக ரசிகர்கள் வந்திருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணி நன்றாக விளையாடுகிறது என தெரிந்தவுடன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பலமுறை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
இதனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் போட்டி முடிந்ததும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மைதானத்தை சுற்றி வந்து கைதட்டினார்கள். அப்போது சென்னை ரசிகர்களும் ஆப்கானிஸ்தான் அணியினருக்கு உரிய மரியாதையை செலுத்தினர்.இதனை பார்க்கும் போது எப்படி 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று மைதானத்தை சுற்றி வந்தார்களோ, அதே போல் ஆப்கானிஸ்தான் அணியினரும் செய்திருக்கின்றனர்.இதைப் பார்த்து வெளிநாட்டு ரசிகர்கள் சென்னை மக்கள் என்றால் கிரிக்கெட்டுக்கு மரியாதை செய்யக் கூடியவர்கள் என்று பாராட்டி வருகிறார்கள்.