அதிர்ச்சி அளிக்கும்
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை 2019 தொடர் வரும் மே கடைசி வாரத்தில் துவங்க உள்ளது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளிக்கும் என கூறப்படுகிறது.
4-5 அணிகளை வீழ்த்துவோம்
கடந்த 2015இல் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை மட்டுமே வீழ்த்தியது. உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. ஆனால், இந்த முறை சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் ரஷித் கான், முஹம்மது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இருப்பதால் 2019 உலகக்கோப்பை தொடரில் 4-5 அணிகளை நாங்கள் வீழ்த்துவோம் என அந்த அணியின் ஷாஹிதி தெரிவித்தார்.
தயார் நிலை
இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது குறித்து பேசிய ஷாஹிதி, உலகக்கோப்பைக்கு முன்னதாகவே இங்கிலாந்து செல்வதுடன், உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன்பு ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் கிரிக்கெட் ஆட உள்ளது தங்களுக்கு உதவும் என கூறினார்.
ஆசிய கோப்பையில் ஆப்கன்!
ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கு அருகே வந்தது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக ஆடிய போட்டி டை ஆனது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக தண்ணி காட்டிய ஆப்கானிஸ்தான், அதிகம் ஆடாத இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளையும் உண்டு இல்லை என செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், இந்த அணிகள் அனைத்தும் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளவை. ஆப்கன் அணியின் பலமே சுழற் பந்துவீச்சு தான்!