அகமதாபாத்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 42வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் - ஜத்ரான் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த நிலையில், அதிரடி வீரர் குர்பாஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஜத்ரான் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் ஷாகிதி 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கண்மூடி திறப்பதற்குள் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன்பின் ரஹ்மத் ஷா - ஒமர்சாய் கூட்டணி இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர். சிறிது நேரம் தாக்கு பிடித்த ரஹ்மத் ஷா 26 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து வந்த கில் 12 ரன்களிலும், நபி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஃப்கானிஸ்தான் அணி தடுமாறியது. அப்போது ஒமர்சாய் உடன் ரஷீத் கான் இணைந்து சிறிது நேரம் போராடினார். சிறப்பாக ஆடிய ஒமர்சாய் அரைசதம் அடித்து அசத்த, ரஷீத் கான் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் கடைசி நேரத்தில் நூர் அஹ்மத் அதிரடியாக சில ரன்களை விளாச, ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.
பின்னர் 26 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அஹ்மத் ஆட்டமிழந்து வெளியேற, முஜீப் உர் ரஹ்மான் களமிறங்கினார். தொடர்ந்து 47வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் ஒமர்சாய் அதிரடியாக சிக்சர்களை விளாசி சதத்திற்கு அருகில் சென்றார். இதனால் 49 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து கடைசி ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி 3 பந்துகளும் டாட் பாலாக மாறியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் 244 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஒமர்சாய் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் சேர்த்து அசத்தினார்.