தரம்சாலா : ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் மைதானத்தின் அவுட் - பீல்டு மிக மோசமாக இருப்பதை சுட்டிக் காட்டி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது.

அந்த மைதானத்தின் அவுட் - பீல்டு பகுதிகள், அதாவது பிட்ச் அல்லாத வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்ற பகுதி மிக மோசமான நிலையில் இருந்தது. வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழும் போது அவர்களுக்கு காயம் ஏற்படும் வகையில் இருந்தது அவுட் பீல்டு.
பொதுவாக அந்த பகுதியில் அதிக அளவிலான புற்கள் இருக்க வேண்டும். அந்த புற்களை சரியாக வெட்டி, சிறிய அளவில் தரையோடு, தரையாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். மேலும், மண்ணோடு அந்த புற்கள் வெளியே வரும் வகையிலும் இருக்கக் கூடாது. அப்போது தான் வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே விழுந்தாலும், அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாமல் அந்த புற்கள் தடுக்கும்.
மாறாக, தரம்சாலாவில் பல பகுதிகளில் புற்களே காணப்படவில்லை. மண் தரையாகவே சில இடங்கள் காட்சி அளித்தது. அது மட்டுமின்றி, சில இடங்களில் வீரர்கள் பீல்டிங் செய்ய கீழே சறுக்கும் போது மண் அவர்கள் காலோடு பெயர்த்துக் கொண்டு வந்தது.
குறிப்பாக முஜீப் உர் ரஹ்மான் பவுண்டரி எல்லை அருகே சறுக்கிக் கொண்டே சென்று பந்தை தடுக்க முயற்சி செய்த போது பெரும் அளவிற்கு மண் பெயர்த்துக் கொண்டு வந்தது. அவரது முட்டி அப்போது தரையில் மோதியது. நல்ல வேளையாக அவருக்கு காயம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இங்கிலாந்து வீரரும் ஆன ஜொனாதன் டிராட் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். தொடரை நடத்தும் பிசிசிஐ இதை எல்லாம் சரியாக பார்க்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
"வீரர்கள் டைவ் அடிக்கலாமா? வேண்டாமா? என யோசிக்கும் நிலையே உள்ளது. உலகம் முழுவதும் வீரர்களை டைவ் அடித்து பீல்டிங் செய்ய வேண்டும் என கூறி வருகிறோம். ஆனால், இங்கே நிலை வேறாக உள்ளது. வீரர்களுக்கு காயம் ஏற்படுமோ என்ற அச்சம் தான் வருகிறது. நல்லவேளையாக முஜீபுக்கு முட்டியில் பெரிதான காயம் ஏற்படவில்லை. முந்தைய தினத்தில் நியூசிலாந்து அணியின் டெவான் கான்வேவுக்கும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. தொடரை நடத்துபவர்கள் இதை எல்லாம் சரியாக பார்க்க வேண்டும்" என்றார் டிராட்.
பிசிசிஐக்கு ஏற்கனவே டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட குழப்பத்தால் ரசிகர்கள் மைதானத்துக்கு வராத நிலையால் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அவுட் பீல்டு இருப்பது அடுத்த தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.