நொய்டா: ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாள் ஆட்டம் மைதானத்தின் மோசமான நிலையால் கைவிடப்பட்டு உள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் நொய்டா மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் மைதானத்தில் எந்த வசதியும் சரியாக இல்லாததால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் அளித்திருக்கும் பேட்டியில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்கள் கூட நொய்டா மைதானத்தை விட அதிக வசதிகளை கொண்டு இருப்பதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்த விவகாரம் பிசிசிஐக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எந்த அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத காரணத்தால் அந்த அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் அதன் போட்டிகளை விளையாடி வருகிறது. இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட வேண்டும் என்றால் பிசிசிஐயின் அனுமதியைப் பெற வேண்டும். மேலும், பிசிசிஐ சொல்லும் மைதானத்தில் தான் போட்டியை ஆப்கானிஸ்தான் அணியால் விளையாட முடியும்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடத்த பிசிசிஐ-இடம் உதவி கேட்டது ஆப்கானிஸ்தான். நொய்டா மைதானத்தில் போட்டியை நடத்திக் கொள்ளுமாறு பிசிசிஐ கூறியது. இதற்கு முன் டேராடூன் மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது.
அந்த மைதானங்களில் ஒன்றில் போட்டியை நடத்த அனுமதிக்குமாறு ஆப்கானிஸ்தான் கோரிக்கை வைத்தது. ஆனால், அந்த மைதானங்களில் வேறு உள்ளூர் போட்டிகள் நடைபெற இருப்பதால் பிசிசிஐ நொய்டா மைதானம் மட்டுமே காலியாக இருப்பதாக கூறிவிட்டது. அதனால், ஆப்கானிஸ்தான் அணியும் அங்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தயாரானது.
ஆனால், போட்டிக்கு முன் ஒரு வாரத்திற்கு மேல் அந்த பகுதியில் மழை பெய்தது. அந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் சரியாக அமைக்கப்படாததால் மைதானத்தின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. போட்டியின் முதல் இரண்டு நாட்களில் ஒரு சொட்டு மழை பெய்யாத நிலையில், ஏற்கனவே தேங்கி நின்ற நீரை வெளியேற்ற முடியாமல் அங்கு இருக்கும் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
மேலும், அங்கு உணவு மற்றும் பிற வசதிகளும் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்திய ஊடகத்தினரே இந்த குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் முன்வைத்து வருகின்றனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், "நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் மைதானத்தில் கூட நொய்டா மைதானத்தை விட அதிக வசதிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் எங்கள் மைதானத்தை மெருகேற்றி இருக்கிறோம்." என்றார்.
மேலும், "ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறியதை போல நொய்டா மைதானத்தில் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டி20 போட்டிகளில் ஆடிய போது என்ன பார்த்தோமோ, அதிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. எங்கள் முதல் இலக்கு லக்னோ மைதானமாக இருந்தது. இரண்டாவதாக டேராடூன் மைதானத்தை எதிர்பார்த்தோம். ஆனால், எங்களின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்து விட்டது. அந்த இரண்டு மைதானங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற இருப்பதாக பிசிசிஐ கூறியது. இந்த ஒரு மைதானம் மட்டுமே காலியாக இருப்பதாக சொன்னது. அதனால் எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை." என்றார்.