நொய்டா: ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த போட்டி நடந்து வரும் நொய்டா மைதானத்துக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் உள்ள நொய்டா மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்டது.
பிசிசிஐ உதவியுடன் நொய்டா மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை நடத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கும் தற்போது சிக்கல் இருந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் நொய்டா பகுதியில் சில நாட்கள் மழை பெய்தது. அதனால், அந்த ஆடுகளும் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்தது. டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் அன்று மழை பெய்யாத போதும் முதல் இரண்டு நாட்களிலும் போட்டியை நடத்த முடியவில்லை.

அங்கு இருந்த மைதான ஊழியர்களால் தேங்கி இருந்த மழை நீரை வெளியேற்ற முடியவில்லை. இதை அடுத்து அந்த மைதானத்தில் மீதம் உள்ள மூன்று நாட்களிலாவது போட்டியை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் மேட்ச் ரெப்ரீ இந்த போட்டியின் முடிவில் மைதானத்தின் பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்டு பகுதியை குறித்து அறிக்கை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புவார் என கூறப்படுகிறது.
இந்த போட்டிக்கான மேட்ச் ரெப்ரீ முன்னாள் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அறிக்கையில் பிட்ச் மற்றும் அவுட்பீல்டு பகுதிகள் சர்வதேச அளவிலான போட்டியை நடத்த தகுதியற்றவை என குறிப்பிட்டு இருந்தால் அந்த மைதானத்திற்கு 3 மதிப்பு இழப்பு புள்ளிகள் (Demerit points) வழங்கப்படும். ஒரு மைதானத்திற்கு ஆறு மதிப்பு இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டால் அந்த மைதானத்தில் அடுத்த 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகள் நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, அந்த மைதானத்தில் போட்டியை ஏற்பாடு செய்த அணிக்கும் பிற்காலத்தில் தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், பிசிசிஐ-யின் கீழ் இயங்கும் நொய்டா மைதானத்திற்கு சர்வதேச போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டால் அது பிசிசிஐ-யின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கும். அதே போல நொய்டா மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
இதில் பிசிசிஐ எந்த தவறு இல்லை என்றும், ஆப்கானிஸ்தான் அணிதான் நொய்டா மைதானத்தில் போட்டியை நடத்த தேர்வு செய்தது என்று மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. முதலில் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டி நடத்த கோரிக்கை வைத்தபோது பிசிசிஐ மூன்று மைதானங்களை சுட்டிக் காட்டி இருக்கிறது. அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு ஆப்கானிஸ்தான் அணியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டு இருந்தது.
அந்த மூன்று மைதானங்கள் - பெங்களூர் சின்னசாமி மைதானம், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம் மற்றும் நொய்டா கிரிக்கெட் மைதானம். இந்த மூன்றில் குறைந்த செலவில் போட்டியை நடத்த ஏதுவாக இருந்த நொய்டா மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணியே தேர்வு செய்ததாக பிசிசிஐ அதிகாரிகள் தற்போது சுட்டிக்காட்டி உள்ளனர். மலிவான ஒப்பந்தத்திற்கு மைதானத்தைப் பெற நினைத்த ஆப்கானிஸ்தான் அணி, தற்போது அதே மலிவான காரணங்களால் டெஸ்ட் போட்டியை முழுமையாக நடத்தி முடிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளது.