நொய்டா: ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி இந்தியாவின் நொய்டா மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஆடுகளத்தில் தேங்கிய மழை நீரின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. முதல் நாளான இன்று ஒரு சொட்டு மழை கூட பெய்யாத நிலையில், போட்டியை நடத்த முடியாதது பெரும் கேலிக்கூத்தாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், பிசிசிஐ மற்றும் மைதான நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கூட இல்லை. அதனால், ஆப்கானிஸ்தான அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவை சொந்த மண்ணாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பிசிசிஐ அவ்வப்போது ஆப்கானிஸ்தான் ஆடும் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி அளித்து, உதவியும் வருகிறது. அப்படி செய்யும் உதவி சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள விமர்சனத்துக்கு முக்கிய காரணம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்ட ஆப்கானிஸ்தான் அணி பிசிசிஐ-இடம் உதவி கேட்டது. பிசிசிஐ-யும் இந்தியாவில் போட்டியை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதற்காக நொய்டா மைதானத்தை தேர்வு செய்து அளித்தது பிசிசிஐ. இந்த போட்டி நடக்கவிருந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்தது.
அதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பயிற்சி செய்ய முடியாமல் தவித்தன. இந்த நிலையில் இன்று முதல் நாள் போட்டி நடைபெற இருந்தது. இன்று காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் நிச்சயமாக போட்டி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் அவுட் ஃபீல்டு பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது.
பந்துவீச்சாளர்கள் ஓடிவந்து பந்து வீசும் பகுதிகளிலும் நிறைய மழைநீர் தேங்கி இருந்தது. அந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அவற்றை விரைவாக நீக்க முடியாமல் மைதான ஊழியர்கள் அவதிப்பட்டனர். முதல் நாள் ஆட்டத்தில் ஒரு சில ஓவர்களையாவது வீசி விடலாம் என மாலை 4 மணி வரை அம்பயர்கள் முயற்சி செய்தனர்.
ஆனால், மைதான ஊழியர்களால் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதை அடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நொய்டா மைதானத்தை தேர்வு செய்த பிசிசிஐ மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நொய்டா மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட நடத்தப்பட்டதில்லை. அங்கு மழை நீர் வடிகால் வசதி இல்லாதது மட்டுமின்றி, கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக பத்திரிக்கையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்தியாவில் சிறந்த வசதிகளை கொண்ட மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு அளித்து இருக்கலாம். அதுவே அந்த அணிக்கு செய்யும் சிறந்த உதவியாக இருக்கும். உதவி செய்கிறேன் என்பதற்காக ஏனோதானோவென ஒரு ஏற்பாட்டை செய்ததால் தற்போது இந்தியாவால் ஒரு டெஸ்ட் போட்டியை கூட சரியாக நடத்த முடியவில்லை என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சி உள்ளது.