நொய்டா: ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. முதல் நாள் மற்றும் இரண்டாம் நாளில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாத நிலையில், ஈரமான அவுட் ஃபீல்டின் காரணமாக இரண்டு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்காக நொய்டா மைதானத்தை ஒதுக்கி கொடுத்திருந்தது பிசிசிஐ. ஆனால், அந்த மைதானம் டெஸ்ட் போட்டி நடத்த "லாயக்கில்லை" என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்தியாவை தனது சொந்த மண்ணாக கருதி நியூசிலாந்து அணியை இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாட அழைத்த ஆப்கானிஸ்தான் அணி தற்போது அவமானத்தில் கூனிக் கூறுக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

தங்கள் சொந்த நாட்டில் சரியான வசதிகள் இல்லாததாலேயே உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐயின் உதவியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நாடி இருந்தது. பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்களது போட்டிகளை ஆப்கானிஸ்தான் அணி விளையாடும். சில சமயம் பிசிசிஐயின் உதவியுடன் இந்தியாவிலும் தங்களின் போட்டிகளை நடத்தி உள்ளது. அந்த வகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி திட்டமிட்டு இருந்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு உதவும் வகையில் நொய்டா மைதானத்தை ஒதுக்கி கொடுத்து இருந்தது பிசிசிஐ. அந்த மைதானத்தை தங்களின் சொந்த மைதானமாக வைத்து நியூசிலாந்து அணியை அங்கு டெஸ்ட் போட்டியில் ஆட அழைத்தது ஆப்கானிஸ்தான் அணி. நியூசிலாந்து வீரர்களும் ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியா வந்துவிட்டனர். ஆனால், அப்போது நொய்டாவில் மழை பெய்ததால் அந்த மைதானம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அங்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் இரண்டு அணி வீரர்களும் சரியாக பயிற்சி செய்ய முடியாமல் தவித்தனர்.
டெஸ்ட் போட்டியின் முதல் நாள் அன்று முற்றிலுமாக மழை பெய்யவில்லை. அதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், மைதானத்தின் அவுட்ஃபீல்டு பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது. மைதானத்தில் இருந்த அனுபவமற்ற ஊழியர்கள் எத்தனை முயற்சி செய்தும், அந்த நீரை அகற்ற முடியவில்லை. இதை அடுத்து முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இரண்டாவது நாள் ஆட்டம் எப்படியும் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் அன்றும் அங்கு மழை நீர் வடியவில்லை. இதை அடுத்து மைதான ஊழியர்கள் ஈரமாக இருந்த அவுட் ஃபீல்டு பகுதிகளில் சிலவற்றை மொத்தமாக வெட்டி எடுத்துச் சென்றனர். அதற்கு பதிலாக வேறு ஒரு பகுதியில் இருந்த புல் தரையை வெட்டி எடுத்து வந்து ஒட்டவைத்தனர். இதுபோல செய்வதால் மைதானத்தில் மேடு, பள்ளங்கள் உருவாகும். இதனால் பவுண்டரி அடிப்பது சிரமமாக மாறிவிடும். அந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கிருந்த மைதான ஊழியர்கள் இந்த விஷயத்தை செய்தனர்.
மேலும், எலக்ட்ரிக் ட்ரையர்களை பயன்படுத்தாமல் சாதாரண மின்விசிறிகளை பயன்படுத்தி ஈரமான பகுதிகளை காய வைக்க முயன்றனர். அந்த முயற்சி பலன் கொடுக்காததை அடுத்து ஸ்டம்புகளை பிடுங்கி எடுத்து வந்து ஈரமான பகுதிகளில் ஓட்டை போட்டனர். அப்படி ஓட்டை போடுவதன் மூலம் மழை நீர் பூமிக்குள் சென்று விடும் என அவர்கள் நினைத்தனர். ஆனால், அதுபோல எதுவும் நடக்கவில்லை. பின்னர் இரண்டாம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த கேலிக் கூத்துக்களை எல்லாம் அங்கு இருந்த ஊடகத்தினரும் நேரில் கண்டனர். நொய்டா மைதானத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் பிசிசிஐ எப்படி இந்த மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டியை நடத்தலாம் என நினைத்தது? என ஊடகத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியாவில் தங்கள் போட்டிகளை நடத்தலாம் என நம்பி வந்த ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் பெரும் ஏமாற்றத்தில் உள்ளது.
நியூசிலாந்து வீரர்களும் செய்வதறியாமல் ஹோட்டல் அறையிலேயே தங்கி இருந்தனர். பிசிசிஐ மற்றும் அந்த மைதானத்தின் நிர்வாகிகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்றால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும்? மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றால் எப்படி மழைநீரை வெளியேற்றுவது என்பது குறித்து ஓரளவு திட்டமிட்டு இருக்க வேண்டும். ஏன் அதை செய்யவில்லை? என சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.