அகமதாபாத்: 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிவடைந்தது. இதன் மூலம் நடப்பு தொடரின் முதல் முறையாக சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர்கள் யார் என்பது தீர்மானிக்கப்பட்டது.
அகமதாபாத்தில் நடைபெற்ற குரூப் டி 13 வது லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் எய்டன் மார்க்கரம் 5 ரன்களில் ஆட்டமிழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குயிண்டன் டிகாக, ரியான் ரிக்கல்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆப்கான் வீரர்கள் தடுமாறினர்.
ஐந்து பௌண்டரி, மூன்று சிக்சர் என அதிரடியாக விளையாடிய குயின் டன் டிகாக் 41 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க ரியான் ரிக்கல்டன் ஐந்து பவுண்டரி, நான்கு சிக்ஸர் என அதிரடியை காட்டி 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதனால் தென்னாபிரிக்க அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. நடுவரிசையில் டிவால்ட் பிரவீஸ் 23 ரன்களிலும், டேவிட் மில்லர் 20 ரன்களும் எடுக்க இறுதியில் மார்க்கரம் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.
இதன் காரணமாக தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் இப்ராஹிம் சார்டன் ஆட்டம் இழக்க குலாப்தீன் நைப், செதுக்குல்லா அட்டல் ஆகியோர் அடுத்தடுத்து டக்அவுட் ஆகினர். டர்வீஸ் ரசூல் 15 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹமுல்லா குர்பாஸ் மட்டும் தனி ஆளாக நின்று அதிரடி காட்டினார். ஏழு சிக்ஸர்களை விரட்டிய அவர் 42 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இறுதியில் அஸ்மத்துல்லா 17 பந்துகளில் 22 ரன்களும், கேப்டன் ரஷீத் கான் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்றது.
எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 187 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. கடைசி மூன்று பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது ஒரு ரன் ஓடிவிட்டு இரண்டாவது ரன் ஓடும் போது ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் டை ஆனதால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை தீர்மானிக்கப்பட்டது.
இதை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மதுல்லா உமர் சாய் சூப்பர் ஓவரை எதிர்கொண்டார். முதல் பந்தில் பௌண்டரி, இரண்டாவது பந்தில் சிக்ஸர், ஐந்தாவது பந்தில் பவுண்டரி என சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட, ஸ்டப்ஸ் சிக்சர் அடித்து மீண்டும் டை ஆக்கினார். இதனால், ஒரே போட்டியில் 2வது முறையாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
இதில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அஸ்மதுல்லா வீசிய பந்தில் ஸ்டப்ஸ் ஒரு சிக்சரும், டேவிட் மில்லர் 2 சிக்சர்களை குவிக்க, சூப்பர் ஓவரில் 23 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனையடுத்து 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 2வது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து, குர்பாஸ் ஹாட்ரிக் சிக்சர்களை விரட்டி அசத்தினார்.
இதனையடுத்து கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது, கேசவ் மகாராஜ் ஓயிடு பந்துகளை வீசினார். இதனையடுத்து, வெற்றிக்கு 5 ரன்களே தேவைப்பட மீண்டும் சூப்பர் ஓவர் வருமா என எதிர்பார்க்கப்பட்ட போது, குர்பாஸ் கேட்ச் ஆனார். இதனால், 2 சூப்பர் ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டதட்ட இழந்தது.