ஆப்கன் சூப்பர் பேட்டிங்
ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு துவக்கம் அருமையாக அமைந்தது. துவக்க வீரர்கள் ஷேசாத் மற்றும் இஹ்சானுல்லா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர். ஷேசாத் 34 ரன்களில் அகிலா தனஞ்ஜெயா பந்தில் LBW முறையில் வெளியறினார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா நிலைத்து நின்று ஆட ஆப்கானிஸ்தான் ரன் உயரத் துவங்கியது.
சூப்பர் கூட்டணிகள்
ரஹ்மத் ஷா, இஹ்சானுல்லா இணைந்து 50 ரன்கள் எடுத்தனர். இஹ்சானுல்லா 45 ரன்களில் அகிலா தனஞ்ஜெயா பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த அஸ்கார் 1 ரன்னில் நடையைக் கட்ட, அப்போது ஆப்கன் 25.6 ஓவர்களில் 110 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து இருந்தது. அடுத்து வந்த ஷாஹிதி, ரஹ்மத் ஷாவுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்க அவர் மறுபக்கம் ரன் குவித்தார். இந்த கூட்டணி 80 ரன்கள் குவித்தது. 90 பந்துகளில் 72 ரன்கள் அடித்த ரஹ்மத் ஷா ஆட்டமிழந்தார். அந்த அணி 41.1 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது.
ஆப்கன் நல்ல இலக்கு
அடுத்து வந்த வீரர்கள் விரைவாக ரன் குவிக்க வேண்டி அடித்து ஆடி விக்கெட்டை இழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கன் 249 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் மலிங்கா மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். அவர் 10 ஓவர்கள் வீசி 66 ரன்கள் கொடுத்து இருந்தார். 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். பெரேரா 5 விக்கெட்கள் எடுத்தாலும், அவரும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். மற்றபடி, இலங்கை மோசமாக கோட்டை விட்டது பீல்டிங்கில் தான்.
எளிதில் வீழ்ந்த இலங்கை
அடுத்து ஆடிய இலங்கை அணியின் துவக்க வீரர் மென்டிஸ், இன்னிங்க்ஸின் இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து தரங்கா 36, சில்வா 23, மாத்யூஸ் 22, குசால் பெரேரா 17, ஜெயசூர்யா 14, திசேரா பெரேரா 28 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆப்கன் தன் சுழல் வித்தையை வைத்து நேற்று வெற்றி பெற்றது. இலங்கை அணி 158 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் ஆப்கன் சுழல் பந்துவீச்சாளர்கள் முஜீப் 2, ரஷித் கான் 2, முஹம்மது நபி 2 விக்கெட்கள் எடுத்தனர். ஆப்கன் இரண்டு ரன் அவுட் எடுத்தும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சூப்பர் போர் சுற்றுக்கு ஆப்கன் கிட்டத்தட்ட தன் இடத்தை உறுதி செய்துள்ளது. வங்கதேசத்துடன் உள்ள போட்டியில் தோற்றாலும் ஆப்கன் சூப்பர் போர் சுற்றுக்கு முன்னேறிவிடும்.