டேராடூன்:இந்தியாவுக்கு விட்டுத் தர மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் அதிபரே கூறும் அளவுக்கு கிரிக்கெட்டில் புதிய புயலாக உருமாறியுள்ள ரஷீத் கானின் அபார பந்துவீச்சில், வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரை ஆப்கானிஸ்தான் ஒயிட்வாஷ் செய்துள்ளது.
உள்நாட்டு போர், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், சமீபகாலமாக கிரிக்கெட்டில் அசத்தி வருகிறது. அந்த அணியின் பல முக்கிய வீரர்கள், உலக அளவில் மிரட்டி வருகின்றனர்.
இதில் முதலிடத்தில் இருப்பது ரஷீத் கான். சமீபத்தில் நடந்த ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், பவுலிங்கில் அசத்தினார். பேட்டிங்கிலும் கலக்கினார்.
டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் வரும் 14ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது.
இந்த நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டித் தொடரில் விளையாடியது. டேராடூனில் நடந்த இந்த தொடரில் 3 ஆட்டங்களிலும் வென்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான்.
நேற்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 145 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் ஆப்கானிஸ்தான் வென்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், ரஷீத்கான் அபாரமாக பந்து வீசி வங்கதேசத்தை திணறடித்தார். 8 விக்கெட்களை வீழ்த்திய அவர் தொடர் நாயகனானார்.