காபூல்: பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லை மாகாணத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB), பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட எல்லை மோதல்களைத் தொடர்ந்து, 48 மணி நேரப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குன் மற்றும் பர்மால் மாவட்டங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் மூன்று கிரிக்கெட் வீரர்களும் பலியாகி உள்ளனர்.
இந்தத் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகமும் ஈடுசெய்ய முடியாத ஒரு பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தத் தாக்குதலில் மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது.
"பக்திகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த எங்களது துணிச்சலான கிரிக்கெட் வீரர்களான கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகியோர், பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர்" என்று அந்த அறிக்கையில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.
"இந்த வீரர்கள், பக்திகாவின் தலைநகரான ஷரானாவில் ஒரு நட்புரீதியான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தனர். போட்டி முடிந்து தங்களது சொந்த ஊரான உர்குனுக்குத் திரும்பியபோது, அவர்கள் ஒரு கூட்டத்தில் இருந்தபோது குறிவைக்கப்பட்டுள்ளனர்" என்று அந்த அறிக்கை மேலும் விளக்கியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
"இந்த சோகமான சம்பவத்திற்குப் பதிலளிக்கும் வகையிலும், உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பாகிஸ்தான், இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது" என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழல் உருவாவதற்கு முன்பே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi), ஐசிசி-க்கு (ICC) ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "ஒருவேளை ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகினால், மாற்றுத் திட்டத்தைத் தயாராக வைத்திருக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது, ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதால், அந்த அணிக்கு பதிலாக எந்த அணி முத்தரப்புத் தொடரில் பங்கேற்கும் என்பதை ஐசிசி-யும், பிசிபி-யும் (PCB) விரைவில் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் அந்த தொடர் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.