நாக்பூர்: உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் 2- வது லீக் ஆட்டம் நாக்பூரில் நேற்று இரவு நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஆப்கானிஸ்தான் அணியின் டோணி என்று செல்லமாக அழைக்கப்படும் முகம்மது ஷாஷாத் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

மற்றொரு வீரரான அஸ்கர் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து 170 ரன்கள் குவித்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஸ்காட்லாந்து. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்ஷெவும்(40), கைல் கோட்செரும் (41) அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் குவித்தனர்.
ஆனால் அதன் பின்னர் இறங்கிய வீரர்கள் ஜோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷெசாத் தேர்வு செய்யப்பட்டார்.