ஹராரே: ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் பவுலர் நவீன் உல் ஹக் வீசிய 13 பந்துகள் கொண்ட ஒரு ஓவர், ஆப்கானிஸ்தானுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரஷீத் கானின் தலைமையில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இந்த டி20 தொடரில் 0 - 1 என்ற கணக்கில் பின்தங்கியது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. கரீம் ஜன்னத் 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து இருந்தார். முகமது நபி 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார்.

அடுத்து ஜிம்பாப்வே அணி சேஸிங் செய்த போது 14வது ஓவரின் முடிவில், 6 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் 57 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அப்போது நவீன் உல் ஹக் வீசிய 15 வது ஓவர், ஆட்டத்தின் போக்கை ஜிம்பாப்வே பக்கம் திருப்பியது. அவர் அந்த ஓவரை ஒரு வைடு-உடன் தொடங்கினார். அதன் பிறகு, பிரையன் பென்னெட் சரியான பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
அதன்பிறகு, நவீன் ஒரு நோ பால் வீசினார். அதில் சிக்கந்தர் ராசா ஒரு பவுண்டரியை அடித்தார். நவீன் அதன் பிறகு ரன் குவிப்பை தடுக்க வேண்டி வைடு யார்க்கர்களை வீச முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்த வர நான்கு வைடுகளை வீசி ஏமாற்றம் அளித்தார். அடுத்து அந்த ஓவரின் இரண்டாவது சரியான பந்தில் சிக்கந்தர் ராசா ஒரு பவுண்டரி அடித்தார்.
நவீன் அந்த ஓவரின் மூன்றாவது சரியான பந்தில் ராசாவின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதன் பின் நவீன் உல் ஹக் மூன்று ஒரு ரன்களையும், மற்றொரு வைடையும் வீசி ஓவரை முடித்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை வாரி வழங்கினார் நவீன் உல் ஹக். அதனால் ஜிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்கு 30 பந்துகளில் 38 ரன்களாக குறைந்தது.
அதனை பயன்படுத்திக் கொண்ட ஜிம்பாப்வே விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே, 145 ரன்கள் இலக்கை, ஆட்டத்தின் கடைசி பந்தில் அடித்து வெற்றி பெற்றது. இது 2019க்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஜிம்பாப்வே பெறும் முதல் வெற்றி ஆகும். இதன் மூலம் ஜிம்பாப்வே இந்த தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றது.
நவீன் உல் ஹக் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் ஓவர் உட்பட 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவர் 15 வது ஓவரில் ஆறு வைடுகள் மற்றும் ஒரு நோ பால் வீசி இருந்தார். அதில் நான்கு வைடுகள் குறைவாக வீசி இருந்தால் கூட ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்கும். அவரின் தவறால் ஆப்கானிஸ்தான் அணி கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்ற போதும் தோல்வி அடைந்தது.