மும்பை: சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவரும், ஜிம்பாப்வே கிரிக்கெட் அமைப்பின் தலைவரும் ஆன டாவெங்வா முக்லானி இது பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.
அப்போது, "ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு நன்மை செய்வது மட்டுமின்றி, ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புக்கு தேவையான நிதியையும் பெற்றுத் தரும். இரண்டு தரப்பிற்கும் அந்த நிதி உதவிகரமாக இருக்கும்." என்றார். "ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் நாங்கள் பேசி இருக்கிறோம். ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் பலவும் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பையை மீண்டும் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளனர்." என்றார்.

மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதை ஒட்டியே இந்த செய்தி வெளியாகி உள்ளது. இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளது.
முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்த போட்டி நடைபெற்றது. அடுத்து 2007 இல் இந்தியாவில் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த இரண்டு முறையும் ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. எனவே. மீண்டும் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை நடத்தப்பட்டால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும்.
2005 ஆப்பிரிக்க - ஆசிய கோப்பைக்கான ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககாரா, வீரேந்தர் சேவாக், ஜாகீர் கான் அனில் கும்ப்ளே, சோயப் அக்தர். ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விளையாடினர்.
அடுத்து 2007 இல் நடந்த ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை போட்டிக்கான ஆசிய லெவன் அணி மகிளா ஜெயவர்த்தனே தலைமையில் ஆடியது. அந்தப் போட்டியில் வீரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்யா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், தோனி ஆகியோர் பங்கேற்றனர்.