ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் அதிரடியான சதம் காரணமாக பெங்களூரு அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின் விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி கிளாஸனின் அதிரடியான சதம் காரணமாக 186 ரன்கள் சேர்த்தது. இதனை பெங்களூரு அணி விராட் கோலியின் சதம் காரணமாக 19.2 ஓவர்களில் விரட்டி அபார வெற்றியை பதிவு செய்தது. சதம் விளாசிய விராட் கோலிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போட்டிக்கு பின் விராட் கோலி ஐதராபாத் அணியின் இளம் வீரர்களுடன் சிறிது நேரம் செலவிட்டார். கிட்டத்தட்ட தோனியை போலவே எதிரணியின் இளம் வீரர்களுடன் செலவிடுவதை கோலி வழக்கமாக கொண்டுள்ளார். நேற்றும் ஐதராபாத் அணியின் இளம் வீரர்கள் பலரும் கோலியிடம் ஆட்டோகிராஃப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் விராட் கோலி அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.
அதேபோல் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆர்சிபி அணியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே விராட் கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் ரொனால்டோவின் தீவிர ரசிகர்கள் என்று அறிவித்துள்ள நிலையில், ஆர்சிபி அணியின் பார்னல்லும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து ரொனால்டோவின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆர்சிபி ஓய்வறையில் செய்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தனது வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மனைவியே முக்கியக் காரணம் என்று விராட் கோலி கூறுவார். அந்த வகையில் மிகமுக்கியமான சதத்தை விளாசிய பின் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.